சென்னை: அச்சிறுபாக்கம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே பள்ளிப்பேட்டை ஊராட்சி மின்வாரிய அலுவலகம் குடியிருப்பு பகுதியில் 50 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் மூலவர், கோயிலின் முன்புற மண்டபம், கோயில் கோபுரம், மூலவர் விமானம் உள்ளிட்டவை கிராம மக்கள் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு கடந்த 9ம் தேதி காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, 10, 11ம் தேதிகளில் சிவாச்சாரியார்களால் மந்திரங்கள் முழங்க மூன்று மற்றும் நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து கும்ப கலசங்கள் புறப்பட்டு மூலவர் விமானம் கோயில் கோபுரத்திற்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளிப்பேட்டை இளைஞர்கள் விழா குழுவினர், பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.