*ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் குழுவினர் ஆய்வு
அணைக்கட்டு : ஊசூர் அருகே அத்தியூர் ஊராட்சி குருமலை-வெள்ளக்கல் மலை பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட குருமலையில் குருமலை, வெள்ளக்கல்மலை, நச்சிமேடு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை பகுதியில் மக்கள் பல ஆண்டுகால கோரிக்கையான தார்சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதியாக அடிவாரத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதில் குருமலை-வெள்ளக்கல்மலைக்கு சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ய குருமலைக்கு நேற்று வந்த ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் குருமலை-வெள்ளக்கல்மலைக்கு சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து குருமலையில் நிதி ஒதுக்கீடு செய்தும் தொடங்கப்படாத ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி, ரேஷன் கடை கட்டும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வில் ரேஷன் கடை கட்டும் பணிகளை தொடங்காததும், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி முதற்கட்ட அளவிலே இருப்பதும் தெரிய வந்தது. இதை பார்த்த செயற்பொறியாளர் இடம் தேர்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்தும் ஏன் பணிகளை தொடங்கவில்லை என பொறியாளர், ஓவர்சீயர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் பணிகளை தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பிஎம்ஏஒய் திட்டத்தில் வீடுகள் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளையும் செயற்பொறியாளர் ஆய்வு செய்து திட்ட பணிகள் அனைத்தும் விரைவாக முடிக்க வேண்டும் என பொறியாளர்கள், ஒப்பந்தார்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, ஒன்றிய பொறியாளர் வசந்தி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் தமிழ்செல்வி, சுப்பரமணி உள்பட பலர் உடனிருந்தனர்.