சென்னை: செங்கல்பட்டு அடுத்த செய்யூர் காவல் நிலையத்தில் மோகன சுந்தரம் மற்றும் பாபு ஆகியோர் உதவி காவல் ஆய்வாளராக இருந்தனர். இவர்கள், செய்யூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ள மார்க்கெட்டில் மது பாட்டில் விற்பவர்கள், பாண்டிச்சேரி மது விற்பவர்கள், கள்ளச் சாராயம் விற்பவர்களை வாரந்தோறும் சந்தித்து மாமூல் பெற்று வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், செய்யூர் பகுதியில் உள்ள வெடால் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வரும் செல்வம் என்பவர், ஜிபே மூலம் உதவி காவல் ஆய்வாளர்கள் 2 பேருக்கும் வாராவாரம் பணம் அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், செல்வத்தின் ஜிபே கணக்கு மூலம் மோகன சுந்தரம் மற்றும் பாபு ஆகியோருக்கு பணம் அனுப்பி வைத்த ஆதாரங்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் மாவட்ட எஸ்.பி.சுகுணா சிங்கிற்கு தெரியவந்தது. இதனால், மாவட்ட எஸ்.பி உத்தரவின்பேரில் இருவரும் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இதனால், அவர்களிடம் மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இருவரும் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டால், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட எஸ்பி சுகுணா சிங் தெரிவித்துள்ளார்.