தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், மாணவிகளிடம் தவறாக நடந்த உதவி பேராசிரியர் வேறு பாடப்பிரிவு துறைக்கு இடமாற்றம் செய்து டீன் அமுதவல்லி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் மாணவிகளிடம் தவறாக நடப்பதாக சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குனருக்கு புகார் சென்றது. அந்த புகாரின்பேரில், நேற்று துறை ரீதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி டீன் அமுதவல்லி கூறியதாவது: சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குனருக்கு கிடைத்த புகாரையடுத்து நேற்று உதவி பேராசிரியர் சதீஷ்குமார் சட்டம் சார்ந்த மருத்துவப்பிரிவில் இருந்து, குழந்தைகள் வார்டு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து இயக்குனர் அளவில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.