சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக பந்தலூர்-16, பிரையர் எஸ்டேட்- 11, வால்பாறை, தோவாலா, செருமுள்ளியில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பளத்தக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வீக்கத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக கடலோரப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் கூறியுள்ளது.