சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவத்தின் 11ம் நாளான நேற்று ராவண பிரம்ம வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அனைத்து விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாகவே பிரமோற்சவம் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். ஆனால், காணிப்பாக்கத்தில் மட்டும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மறுநாள் கொடியேற்றத்துடன் 21 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறும்.பிரமோற்சவத்தில் ஒவ்வொரு வம்சத்தினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்திற்கு பூஜை செய்து வாகனத்தை ஊர்வலமாக தொடங்கி வைப்பது வழக்கம்.
அதேபோல், பிரமோற்சவத்தின் 10ம் நாளான நேற்று முன்தினம் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மாலை அதிகார நந்தி வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இந்நிலையில், நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மாலை ராவண பிரம்மா வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு நான்கு மாட வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதேபோல் காவல்துறையினர் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், காணிப்பாக்கம் நகரம் முழுவதும் சிசி கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரமோற்சவத்தின் 12ம் நாளான இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறும். அதனை அடுத்து யாழி வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.