கூடலூர் : கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு கொக்காகாடு பகுதியில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சாலையை ஒட்டி ஓடும் கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்து மண் அரிப்பு ஏற்பட்டதால் சாலையில் பிளவு ஏற்பட்டு கால்வாயில் சரிந்துள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து இப்பகுதி வார்டு கவுன்சிலர் இளங்கோ கூறுகையில், ‘இந்த கிளைச்சாலையை ஒட்டி 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மலையால் சாலை சேதமடைந்ததால் அவசர தேவைகளுக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சேதமடைந்த பகுதியை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பகுதிக்கு கட்டுமான பொருட்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக பணிகள் துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை குறைந்த பின்னர் பணிகள் துவங்கும் என தெரிவித்துள்ளார்.