புதுடெல்லி: டெல்லியில் நடந்த பேருந்து கொள்முதல் ஊழல் பற்றி சிபிஐ விசாரிக்க அம்மாநில ஆளுநர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையால் தனியார் ஆதாயம் அடைவதாகவும், இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் பாஜ குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் சிசோடியா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது. குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி களமிறங்குவதை தடுக்கவே ஒன்றிய அரசு இப்படி செய்வதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, கடந்த 2019ம் ஆண்டு டெல்லி அரசு ஆயிரம் தாழ்தள பேருந்துகளை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக பாஜ புகார் அளித்தது. இது பற்றி விளக்கம் அளிக்கும்படி, டெல்லி தலைமை செயலாளருக்கு ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டார். அதன்படி, தலைமை செயலாளர் அளித்த பதிலில், டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ெதரிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்த முறைகேடு பற்றி சிபிஐ விசாரிக்க ஆளுநர் சக்சேனா நேற்று ஒப்புதல் வழங்கினார். ஆனால், ‘இந்த பேருந்துகளின் கொள்முதல் நடக்கவே இல்லை. இதற்காக எந்த நிறுவனத்துக்கும் பணமும் கொடுக்கப்படவில்லை,’ என்று கூறியுள்ள ஆம் ஆத்மி, நடக்காத முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக ஆளுநரை கண்டித்தள்ளது.