க.பரமத்தி: கல் குவாரிக்கு எதிராக புகார் அளித்த விவசாயி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குவாரி உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், குப்பம், காளிபாளையம் வெட்டுகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(52). விவசாயி. சமூக ஆர்வலர். இவர் நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சொந்த வேலையாக காருடையாம்பாளையம் சென்றார். அப்போது தனியார் கல்குவாரி மினி லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த அவரது மனைவி ரேவதி மற்றும் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் அங்கு திரண்டனர்.
போலீசாரிடம் ரேவதி அளித்த புகாரில், கரூர் ஆண்டாங்கோவில் அருகே சிந்து நகரை சேர்ந்த செல்வகுமாருக்கு (39) சொந்தமாக கல்குவாரி உள்ளது. அந்த கல் குவாரி உரிமம் முடிந்த பின்னரும் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக என் கணவர் ஜெகநாதன் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் கனிம வளத்துறைக்கும் புகார் அளித்திருந்தார். அதை விசாரித்த அதிகாரிகள் கல் குவாரியை மூட உத்தரவிட்டனர். இதனால், திட்டம் போட்டு லாரி ஏற்றி கொலை செய்து விட்டனர் என கூறியிருந்தார்.இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்து ஏற்படுத்திய மினி லாரி கல் குவாரிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரி டிரைவரான சேலம் ஓமலூரைசேர்ந்த சக்திவேல்(24), குவாரி உரிமையாளர் செல்வகுமார், ராணிப்பேட்டை ரஞ்சித் (44) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.