திருப்பூர்: பல்லடம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பல்லடம் கரடிவாவி செக்போஸ்ட் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக நேற்று முன்தினம் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 25 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி கொண்டு வருவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட ஈரோடு சென்னிமலை பகுதியை சேர்ந்த மோகன் (53), திருச்சி மணப்பாறையை சேர்ந்த ஜான் பிரபு (28), ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட 25 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.