சென்னை: சென்னையில் 537 லாட்ஜிகளில் சோதனைநடத்தி குற்றப்பின்னணி உள்ள 20 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் சென்னை மாநகர காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் உள்ள 537 லாட்ஜிக்கள், மேன்ஷன்கள், தங்கும் விடுதிகளில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, குற்ற வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க கூடாது என்று லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
மேலும், சென்னையில் ப பைக், ஆட்டோக்கள், இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் என மொத்தம் 5,603 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது மது போதையில் வாகனம் ஓட்டியது மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்களை அடையாளம் காணும் கேமரா மூலம் 2,264 நபர்களை சோதனை செய்யப்பட்டு அதில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த 20 பழைய குற்றவாளிகளை போலீசார் அடையானம் கண்டு கைது செய்தனர்.