×

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள்: மலர்கள் இல்லாத பூங்காக்களை பார்த்து ஏமாற்றம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், மலர்கள் இல்லாத பூங்காக்களை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். நீலகிரியில் ஆண்டுதோறும் இரு சீசன் கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முதல் சீசனாகவும், செப்டம்பர் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை இரண்டாவது சீசனாகவும் கடை பிடிக்கப்படுகிறது. முதல் சீசன் போது மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்வது வழக்கம்.

அதேசமயம் இரண்டாம் சீசன்போது வெளிநாடுகள் மற்றும் வெளி மாநில,ங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இச்சமயங்களில் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை என்ற போதிலும், பூங்கா முழுவதுமு் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும்.
அதேபோல், 10 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்தவுடன் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். தற்போது நீலகிரியில் இரண்டாம் சீசன் துவங்கியுள்ள நிலையில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா போன்ற பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களாக மழை பெய்த நிலையில், இம்முறை மலர் செடிகள் நடவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளில் 90 சதவீத செடிகளில் மொட்டுக்களே காணப்படுகின்றன. ஒரு சில செடிகளில் மட்டுமே மலர்கள் பூத்துள்ளன. அதே போல், பெரும்பாலான தொட்டிகளிலும் பூக்கள் இன்னும் மலர்கள் பூக்கவில்லை. இதனால், மலர் அலங்காரம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசிப்பது வழக்கம். ஆனால், இம்முறை தொட்டிகளில் மலர்கள் அதிகளவு பூக்காத நிலையில், இம்மாதம் இறுதி வாரத்தில் அலங்காரம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அடுத்த மாதம் காலாண்டு விடுமுறை, பூஜை விடுமுறையின் போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மலர்களையும், அலங்காரங்களையும் காண வாய்ப்புள்ளது. தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இல்லாத பூங்காக்களை பார்த்து ஏமாற்றத்துடனே திரும்பி செல்கின்றனர்.

Tags : Nilgiri district , Tourists to Nilgiri district: Disappointed by flowerless parks
× RELATED கோடை வெயிலின் தாக்கம்: கருகும் தேயிலை செடிகள்