×

சுருளி அருவியில் சாரல் விழா நடத்தப்படுமா?... எதிர்பார்ப்பில் சுற்றுலாப் பயணிகள்

தேனி: சுருளி அருவியில் சுற்றுலாத்துறை மூலம் சாரல் விழா நடத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவி. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுருளி அருவியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக அரசு இருந்தபோது சுற்றுலாத் துறை மூலம் சாரல் விழா நடத்தப்பட்டு வந்தது. இத்தகைய விழா கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு சாரல் விழா சுருளி அருவியில் நடத்தப்படவில்லை. இதன்பின்னர் வைகை அணையில் சுற்றுலாவிழாவாக கடந்த 2017ம் ஆண்டு அதிமுக அரசால் நடத்தப்பட்டது. பின்னர் இவ்விழாவும் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் சாரல் மழை பெய்யும்போது சுருளிஅருவில் சாரல் விழா நடத்துதைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிவது உண்டு. இத்தகைய சாரல்விழா நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இரு நாட்களில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து கலைநிகழ்ச்சிகள், சுற்றுலா பயணிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதன்பிறகு சாரல் விழா நடத்தப்படவில்லை. 2020ம் ஆண்டு கொரோனா நோய்த் தொற்று பரவியதால் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத் துறை மூலம் விழா நடத்தப்படாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் சாரல் மற்றும் கன மழை பெய்து வருகிறது. எனவே, இவ்வாண்டு பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை காலம் வரும்போது சுருளி அருவில் சாரல் விழா நடத்தப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, சுருளி அருவியில் இவ்வாண்டு சாரல் விழா நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Charal Festival ,Suruli Falls , Suruli Falls, Charal Festival, Tourists
× RELATED சுருளி அருவியில் குறைந்த நீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்