சென்னை: போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் உயர்கல்வி பயில்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயர் மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை பெற்றால் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செலவழித்த தொகை பெற விண்ணப்பித்து, பரிசீலனைக்கு பின்னர் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து சிகிச்சை பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கு அத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வேளச்சேரி, குருநானக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை போலீசார் மற்றும் அமைச்சுப்பணியளார்களின் வாரிசுகளில் 457 மாணவர்களுக்கு 2020-21ம் கல்வி ஆண்டிற்கான நூற்றாண்டு கல்வி உதவித்தொகை ரூ.69.72 லட்சம் மற்றும் 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 14 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்வி உதவித்தொகை ரூ.3,24,760ஐ வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் லோகநாதன், மகேஸ்வரி, காவல் இணை ஆணையர் (தலைமையிடம்) சாமுண்டீஸ்வரி, காவல் துணை ஆணையர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.