சென்னை: ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக தமிழகத்திலும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கோவையில் 90 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது இன்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
அதன் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதே நிலை 16ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள், ஒடிசா கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 50 கிமீ வேகத்தில் வீசும். இலங்கை கடற்கரையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் காற்று வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.