திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அதிமுக தற்காலிக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். இதையொட்டி அவர் நேற்றிரவு திருப்பதிக்கு வந்தார். திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில், ஹயக்ரீவர் கோயிலில் குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இரவு திருமலையில் தங்கிய அவர், இன்று காலை ஏழுமலையான் கோயிலில் வி.ஐபி. தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப்பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர். முன்னதாக ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் தரிசனம் செய்து அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து வழிபட்டார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சென்னை புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் அவர் கோயிலுக்கு வந்த இடத்தில் பேட்டியளிப்பதில்லை என்றுகூறி விட்டு சென்றுவிட்டார்.