சென்னை: நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்/ சென்னை, எம்.ஜி.ஆர் நகரிலுள்ள தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் மா சுப்ரமணியன் பேசியதாவது: நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைந்துள்ளது. பெரிய அளவில் குறையவில்லை, கடந்த ஆண்டை விட 3% குறைந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தான் நீட் தேர்வு முடிவுகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிசாமிதான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறது. நீட் மசோதா குடியரசுத்தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.