சென்னை: விருத்தாச்சலம் ரயில்வே நிலையத்தில் ரயில் ஏற சக்கர நாற்காலியில் வந்த ஒரு மாற்றுத் திறனாளியை, ரயில்வே பாதுகாப்பு காவலர் சரவணன் தன் கையில் தூக்கி இருக்கையில் அமர வைத்தார். இந்த வீடியோ வைரலாகி பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இக்காவலரை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: சக உயிருக்கு உதவுவதைக் காட்டிலும் பேரின்பம் எதுவுமில்லை. ரயில்வே பாதுகாப்புக் காவலர் சரவணனின் நல்லுள்ளம் போற்றத்தக்கது, பாராட்டுகள், வலிவற்றோருக்கு நமது வலிமை பயன்படட்டும், மானிடம் தழைக்கட்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார்.