சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவண்ணா (40). கூலி தொழிலாளி. இவர், தனது மனைவி காளி மற்றும் குழந்தைகளுடன் கிராமத்தில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வருகிறார். வீட்டிற்கு தனது மனைவி காளி பெயரில் மின் இணைப்பு பெற்றுள்ளார். இவரது வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 100 யூனிட் வரை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இலவச பயன்பாடு என்பதால் இதுவரை இவர் மின் கட்டணம் செலுத்தியதே இல்லை. இந்நிலையில், அவரது செல்போன் எண்ணிற்கு மின் கட்டணம் ரூ.94,985 செலுத்தும்படி குறுஞ்செய்தி வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவண்ணா, உடனடியாக தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார். மின்வாரிய அதிகாரிகள் மின்மீட்டர் கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் தவறாக குறுஞ்செய்தி வந்துள்ளதாக தெரிவித்ததையடுத்து ரேவண்ணா நிம்மதி அடைந்தார்.