ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் இரண்டு வீடுகளில் 38 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி வீராசாமி பிள்ளை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் காமராஜ் (35). இவர், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி காமராஜ் அவரது மனைவி பாரதி, குழந்தை உள்ளிட்டோர் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு ஆகஸ்ட் 17ம் தேதி வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை, இந்திய மதிப்பில் ரூ.20,000 மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் ரூ.1 லட்சம், 2 கிலோ வொள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கடந்த 1ம் தேதி சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர், வேன் ஓட்டுனர். இவரது மனைவி ஆனந்தி (30). இந்நிலையில், சம்பவத்தன்று சுரேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார், ஆனந்தி அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணிக்கு சென்றிருந்தார். பணி முடிந்து ஆனந்தி மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரேவில் இருந்த 18 சவரன் நகை, ரூ.2 லட்சம், 500 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த, இரண்டு கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொள்ளைபோன இடங்களில் அருகில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.