சேலம்: தொடர் முகூர்த்தம் எதிரொலியாக சேலத்தில் வாழைக்காயின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆவணி மாதத்தில் தொடர்ச்சியாக சுபமுகூர்த்தம் வருவதால், திருமணம், கிரகபிரவேஷம் உள்ளிட்ட ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த இரு வாரங்களாக காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி சேலம் மார்க்கெட்டுகளில் வாழைக்காயின் விலை அதிகரித்து காணப்படுகிறது. ஈரோடு மாவட்டம் கோபி, சத்தியமங்கலம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகிறது.
அங்கிருந்து சேலம் மார்க்கெட்டுகளுக்கு வாழை இலை, வாழைப்பூ, தண்டு மற்றும் வாழைக்காய் அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. விஷேச தினங்களில் பஜ்ஜி மற்றும் பொறியல் செய்ய பயன்படுத்தப்படும் வாழைக்காய், வழக்கமான நாட்களில் ஒன்று ₹4 முதல் ₹8 வரை விற்பனை செய்யப்படும். தற்போது தொடர் முகூர்த்ததால், சுப நிகழ்ச்சிகளில் அதன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காய் ஒன்றுக்கு ₹4 வரை விலை உயர்ந்துள்ளது. அதாவது சேலத்தில் வாழைக்காய் ஒன்று ₹8 முதல் ₹10 வரை அளவிற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருவதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.