இடைப்பாடி : சேலம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக, ஏற்காடு அடிவாரத்தில் இருந்து ஓமலூர், தாரமங்கலம், வெள்ளாளபுரம், சின்னப்பம்பட்டி, வேமனேரி, தாதாபுரம், நாச்சிபாளையம், வெள்ளநாயக்கன்பாளையம், கோத்தர்பாளையம், ஆவணிகோட்டை, இடைப்பாடி, நைனாம்பட்டி பாலம் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் நைனாம்பட்டியை ஒட்டியுள்ள வீடுகள், டென்னிஸ் கிளப் பின்புறம் உள்ள வீடுகள் என 50க்கும் மேற்பட்ட வீடுகளில், தண்ணீர் உள்ளே புகுந்தது. தண்ணீரை பாத்திரங்கள் கொண்டு மக்கள் மொண்டு வெளியே ஊற்றினர். தண்ணீர் அதிகமாக வந்ததால், அப்பகுதி மக்கள் வீட்டை பூட்டி விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த இடைப்பாடி நகராட்சி நகரமன்ற தலைவர் பாஷா, ஆணையாளர் சசிகலா, தாசில்தார் லெனின், பொதுப்பணித்துறை கோட்ட உதவி பொறியாளர் குபேந்திரன், உதவி பொறியாளர் அருள்செல்வன், நகராட்சி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் முருகன், தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன், இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, ஆர்.ஐ முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் சாலை பணியாளர்கள், நகராட்சி துப்புர பணியாளர்கள், நைனாபட்டி பாலத்தில் படர்ந்து தேங்கிய ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தாழ்வான பகுதிகளில், தண்ணீர் புகுந்த வீடுகளில் தங்கியிருந்தவர்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.