சிதம்பரம்: சிதம்பரம் அருகே குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அம்மாபேட்டை வடக்குதெரு, மேட்டுதெரு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இரண்டு குளங்கள் உள்ளது. இதில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து குளத்தை முழுவதுமாக மூடி உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த குளத்து நீரை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதேபோன்று சிதம்பரம்- கடலூர் செல்லும் சாலையான வண்டிகேட் அருகே பாசிமுத்தான் ஓடையிலும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து முழுவதுமாக மூடி உள்ளது. இவற்றையும் அகற்றிட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.