சென்னை: ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்துள்ளார். பின்னர் பேசிய அவர்; அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் செல்லும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும். ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஓபிஎஸ் மனம் வருந்தும் படி இபிஎஸ் பேசுவதை கண்டிக்கிறோம் என கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பின்படி ஓபிஎஸ்-ன் ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்தாகவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்வதால் ஓபிஎஸ் கட்சி அலுவலகம் சென்று பணியாற்ற எந்த தடையும் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செல்லும்போது அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் கூடும் வாய்ப்புள்ளது எனவும் ஏராளமான தொண்டர்கள் அதிமுக அலுவலகத்தில் கூடுவதை பயன்படுத்தி கலவரம் செய்ய சமூக விரோதிகள் திட்டம் எனவும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் செல்ல ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இபிஎஸ் இன்று அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில் ஓபிஎஸ்-ம் அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.