×

திருப்புத்தூரில் பயங்கரம்; தலைமை ஆசிரியை கொடூர கொலை: 20 சவரன், பணம் கொள்ளை

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் தனியாக வீட்டில் இருந்த தலைமை ஆசிரியையை வெட்டி கொன்று 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிவர் ரஞ்சிதம் (52). இவரது கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்டார். இவரது மகன் கோவை மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். மகள் திருமணமாகி பட்டுக்கோட்டையில் வங்கியில் பணிபுரிகிறார். திருப்புத்தூர் தங்கமணி தியேட்டர் எதிர்புறம் கான்பா நகரில் ரஞ்சிதம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை ரஞ்சிதம் பள்ளிக்கு வரவில்லை. சக ஆசிரியர்கள் போன் செய்தபோது போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் வீட்டிற்கு சென்றுபார்த்தபோது முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ரஞ்சிதம் கை, கால்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருப்புத்தூர் போலீசார் கொலை நடந்த வீட்டை பார்வையிட்டு அருகில் இருந்தவர்களிடமும் உறவினர்களிடமும் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், “நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதம் தனியாக இருப்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். அவர் அணிந்திருந்த செயின், வளையல் என 20 பவுன் நகை, வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். வீட்டின் முன்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் வயர்களை துண்டித்துள்ளனர். கொலை செய்த பின்னர் வீட்டின் பின்புறம் வழியாக ஏறி குதித்து தப்பிச் சென்றிருக்கலாம். நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா, வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

Tags : Tiruputhur , Terror in Tiruputhur; Brutal murder of headmistress: 20 Sawaran, money robbery
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்