×

பராமரிப்பு பணிக்காக 10ம் தேதி நள்ளிரவு முதல் திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்: மாற்று வழியில் செல்ல கலெக்டர் அறிவுறுத்தல்

திருச்சி: திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் 10ம்தேதி நள்ளிரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் செல்ல கலெக்டர் பிரதீப்குமார் அறிவுறுத்தி உள்ளார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையொட்டி இப்பணிகள் மேற்கொள்ள 5 மாதகாலம் ஆகும் ஆதலால், மேற்படி காவிரிப் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை வரும் 10.9.2022 சனிக்கிழமை இரவு 12 மணிமுதல் கீழ்காணும் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரைசாலை) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடதுகரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலது புறம் திரும்பிட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை - திருச்சி - திண்டுக்கல் - சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரைசாலை) அண்ணா சிலைவந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவிநகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சிஅடையலாம்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணா சிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலைகாவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம். காவிரிப்பாலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதை முன்னிட்டு மேற்கண்ட மாற்றுப் பாதையில் பயணம் செய்து ஒத்துழைப்பு வழங்கிடும்படி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Trichy Kaviri Bridge , Maintenance work, traffic stop at Trichy Cauvery Bridge, Collector instruction
× RELATED பராமரிப்பு பணிக்காக இன்று நள்ளிரவு...