×

ஆலங்குடி அருகே பரபரப்பு அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்தது-20 குழந்தைகள் உயிர் தப்பினர்

ஆலங்குடி : ஆலங்குடி அருகே திடீரென அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்தது, 20 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட விஜயரெகுநாதபட்டியில் பச்சிளம் குழந்தைகள் படிக்கக்கூடிய அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த அங்கன்வாடி கட்டிடம் மற்றும் அதன் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சித் தலைவர் பிரேமா, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்து பார்வையிட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர் பழுதடைந்த கட்டிடத்தை அகற்றுவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் இதுவரை அந்த கட்டிடம் அகற்றப்படாததால் நேற்று அங்கன்வாடி மையம் செயல்படும் நேரத்தில் மேற்கூரைகள் பெயர்ந்து கீழே விழுந்தது.

இடிந்த பகுதி குழந்தைகளுக்கு அருகில் விழுந்ததால் அங்கு பயின்று வந்த பச்சிளம் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் அனைவரையும் அருகில் உள்ள பள்ளியின் தாழ்வாரத்தில் அமர வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Alangudi , Alangudi : Anganwadi roof suddenly collapsed near Alangudi, 20 children survived fortunately Pudukottai
× RELATED புதுக்கோட்டை, ஆலங்குடி கிராமங்களில்...