புழல்: சோழவரம் அருகே குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சோழவரம் ஒன்றியம் ஞாயிறு முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட பசுவன்பாளையம் கிராமத்தில் சத்திரகுளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, ஞாயிறு கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் அளவீடு செய்து, ‘‘இங்கு யாரும் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது.
ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்று அறிவிப்பு பலகை வைத்தனர். அதையும் மீறி தனியார் நிறுவனத்தினர் இந்த குளத்தின் கரைகளை உடைத்து சாலை அமைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.