×

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும், ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

கன்னியாகுமரியில் நாளை(புதன்கிழமை) தொடங்க இருக்கும் பாத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து மாலை 5.15 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார். இந்நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் இரவு சென்னையில் தங்குகிறார். தொடர்ந்து ராகுல் காந்தி நாளை காலை 6 மணியளவில் சென்னையில் இருந்து சாலை வழியாக  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பாரத பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வருகிறார்.

அங்கு அவர் மலர் அஞ்சலி செலுத்துகிறார். காலை 6.50 மணியளவில் நினைவிடத்தில் உள்ள பாதுகாப்பு அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். காலை 6.55 மணியளவில் நினைவிடத்தை ராகுல்காந்தி சுற்றி பார்க்கிறார். காலை 7 மணியளவில் ராஜீவ்காந்தியின் தியாக பூமியில் அஞ்சலி செலுத்துகிறார். காலை 7.05 மணியளவில் வீணை காயத்ரியின் இசையஞ்சலியில் பொதுமக்களுடன் ராகுல்காந்தி பங்கேற்கிறார். 8 மணியளவில் நினைவிடத்தில் அரச மரக்கன்றை ராகுல் நடுகிறார். தொடர்ந்து ராஜீவ்காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் அவருடன்  உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுக்கிறார்.

காலை 8.10 மணியளவில் நினைவிட நுழைவு வாயிலில் காங்கிரஸ் கொடியை ராகுல்காந்தி ஏற்றுகிறார். காலை 8.15 மணியளவில் காரில் அவர் மீண்டும் சென்னை திரும்புகிறார். காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரிக்கு செல்கிறார். அங்கிருந்து கன்னியாகுமரி படகு துறைக்கு காரில் செல்லும் அவர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான படகில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுகிறார். பின்னர் காமராஜர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தும் ராகுல்காந்தி அதன் பின்னர் காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அங்கிருந்து ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்க உள்ளார்.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேசியக்கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து அங்கிருந்து 600 மீட்டர் நடைபயணத்தை மேற்கொள்கிறார். ராகுல்காந்தியுடன் 300 பேர் நடைபயணத்தில் பங்கேற்கின்றனர். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 118 பேர் அவருடன் டெல்லி வரை பயணிக்கின்றனர். 100 பேர் தமிழ்நாட்டில் இருந்து நடைபயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடைபெறுகின்ற இந்திய ஒற்றுமை யாத்திரை பயண (பாரத் ஜோடோ யாத்ரா) பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசுகிறார்.

நாளை இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வரும் அவர் அங்கு ஓய்வு எடுக்கிறார். 8ம் தேதி காலை 6 மணிக்கு நடைபயணம் தொடங்கும் ராகுல்காந்தி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து புறப்படுகிறார். கல்லூரி முதல் கொட்டாரம் காமராஜர் சிலை வரை நடைபயணம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு கொட்டாரம் காமராஜர் சிலை தொடங்கி பொத்தையடி ஜங்ஷன் வரை நடக்கிறது. காலை 7 மணிக்கு பொத்தையடி முதல் வழுக்கம்பாறை வரையும், 7.30 மணிக்கு வழுக்கம்பாறை சந்திப்பு தொடங்கி சுசீந்திரம் எஸ்எம்எஸ்எம் பள்ளி வரையும் நடக்கிறது. பின்னர் மாலை 3 மணிக்கு சுசீந்திரம் எஸ்எம் எஸ்எம் பள்ளி தொடங்கி கோட்டார் புனித சவேரியார் பேராலயம் வரையும், மாலை 4 மணிக்கு கோட்டார் புனித சவேரியார் பேராலயம் முதல் டெரிக் சந்திப்பு வரையும் நடைபயணம் நடைபெறுகிறது.

செப்டம்பர் 9ம் தேதி காலை 6 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல் சுங்கான்கடை சந்திப்பு வரையும், காலை 6.30 மணிக்கு சுங்கான்கடை சந்திப்பு முதல் வில்லுக்குறி சந்திப்பு வரையும், காலை 7 மணிக்கு வில்லுக்குறி சந்திப்பு முதல் புலியூர்குறிச்சி சர்ச் வரையும். மாலையில் 3 மணிக்கு புலியூர்குறிச்சி சர்ச் முதல் மேட்டுக்கடை மசூதி சந்திப்பு வரையும், மாலை 4 மணிக்கு தக்கலை மேட்டுக்கடை சந்திப்பு முதல் முளகுமூடு சந்திப்பு வரையும் நடைபயணம் நடக்கிறது. செப்டம்பர் 10ம் தேதி காலை 6 மணிக்கு முளகுமூடு புனித மேரிஸ் ஐசிஎஸ்இ பள்ளி முதல் சாமியார்மடம் வரையும், காலை 6.30 மணிக்கு சாமியார்மடம் முதல் சிராயன்குழி வரையும், காலை 7 மணிக்கு சிராயன்குழி முதல் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி வரையும் பயணம் நடக்கிறது.

மாலை 3 மணிக்கு மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி முதல் குழித்துறை சந்திப்பு வரையிலும், மாலை 4மணிக்கு குழித்துறை சந்திப்பு முதல் படந்தாலுமூடு சந்திப்பு வரையும், மாலை 4.30 மணிக்கு படந்தாலுமூடு சந்திப்பு முதல் தளச்சான்விளை வரையும் பயணம் நடக்கிறது. அன்று இரவு செறுவாரக்கோணத்தில் ராகுல்காந்தி ஓய்வெடுக்கிறார்.செப்டம்பர் 11ம் தேதி அங்கிருந்து பாறசாலை வழியாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். ராகுல்காந்தி மற்றும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் தங்க, ஓய்வெடுக்க வசதியாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 60 கேர வேன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கேர வேன்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கேர வேனை ராகுல்காந்தி மற்றும் அவருடன் வருகின்ற தலைவர்கள் பயன்படுத்துவதற்காக பிரமாண்ட வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Ragul Gandhi ,Chennai ,Delhi , Rahul Gandhi arrived in Chennai by flight from Delhi: Volunteers enthusiastically welcomed
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!