×

சென்னையில் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு.. இழப்பீடு வேண்டாம்; தொடர்ந்து வேலை வேண்டுமென கோரிக்கை

சென்னை: ஃபோர்டு நிர்வாகம் இழப்பீடு வழங்குவதாக கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனாம்பேட்டை தொழிலாளர் நல வாரியம் முன்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஃபோர்டு நிறுவனம் சென்னை மற்றும் குஜராத் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தி, ஆலைகளை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி சென்னை ஆலையில் கடைசி காரை தயாரித்து உற்பத்தியை  நிறுத்தியது. ஆனால் குஜராத்தில் உள்ள ஆலையை அம்மாநில அரசு தலையிட்டு வேறொரு நிர்வாகத்தின் மூலம் வாங்க வைத்து தொடர்ந்து தொழிலாளர்கள் பணிசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல சென்னை ஆலையையும் வேறொரு நிர்வாகத்திற்கு விற்பனை செய்து தங்களுக்கு தொடர்ந்து பணி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர் நல வாரியம் முன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு இழப்பீடு வேண்டாம் மாறாக தொடர்ந்து வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


Tags : Ford ,Chennai , Chennai,Manufacturing,Ford Company,Worker,Compensation
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...