×

151வது பிறந்த நாள் விழா வ.உ.சி. இழுத்த செக்குக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் தூவி மரியாதை

கோவை : வஉசி 151-வது பிறந்த நாள் விழாவையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள வஉசி இழுத்த செக்குக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்திய சுதந்திர போராட்டத்தின்போது வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர், 2 வருடம் 4 மாதம் 22 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறையில் அவரை சித்ரவதை செய்யும் நோக்கில், ஆங்கிலேய அரசு அதிகாரிகள், செக்கு இழுக்க வைத்தனர். அவர் இழுத்த செக்கு, சிறை வளாகத்தில் இன்னும் அப்படியே உள்ளது. இது, சிறை நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் வஉசி 151வது பிறந்த நாள் விழா கோவை மத்திய சிறை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி வஉசி இழுத்த செக்கு மற்றும் அவருடைய மார்பளவு சிலை, உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வஉசி செக்கு மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக், புறநகர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், சிறை எஸ்.பி ஊர்மிளா, முன்னாள் எம்.பி. நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வஉசி இழுத்த செக்குக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


Tags : V.U.C. ,Minister ,Senthil Balaji , Coimbatore: On the occasion of Vaushi's 151st birthday celebrations, Electricity Minister Senthil Balaji paid a check drawn by Vaushi in Coimbatore Central Jail.
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட...