திருச்சி: மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் கீதா மைக்கேல்ராஜ் வெற்றிபெற்றார். மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அதிமுக 11, திமுக 8, காங். 1, இந்திய கம்யூ.2, சுயேச்சைகள் 5 என வெற்றி பெற்றன. திமுககூட்டணியும், அதிமுகவும் சமமான எண்ணிக்கையில் வார்டு உறுப்பினர்களை பெற்றிருந்த நிலையில், சுயேச்சை உறுப்பினர்கள் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால், மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் என்று கருதப்பட்டது. இதையடுத்து, மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவின் கீதா மைக்கேல் ராஜ், அதிமுகவின் பா.சுதா போட்டியிட்டனர். மறைமுக தேர்தலில் அதிமுகவின் சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
திமுக வேட்பாளர் கீதா மைக்கேல்ராஜ் 12 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். மணப்பாறையில் நகராட்சித் தலைவர் பதவியை முதன்முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது. இதனிடையே, அதிமுகவை சேர்ந்த சுதா, மணப்பாறை நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட கீதா மைக்கேல்ராஜ் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மணப்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமன் 8 வாக்குகள் பெற்றார். மணப்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 கவுன்சிலர்களில் ஒருவரின் வாக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.