சென்னை: தி.நகர், அசோக்நகர், பூந்தமல்லி, காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் உள்பட 26 இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தகைசால் பள்ளிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தினை மேலும் உயர்த்துவதற்காக, முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் - பூந்தமல்லி, காமராஜ் நகர், சென்னை மாவட்டம் - தி.நகர், அசோக் நகர், காஞ்சிபுரம் மாவட்டம் - பெரிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் - காட்டாங்கொளத்தூர், நந்திவரம், ராணிப்பேட்டை மாவட்டம் - ஆற்காடு, வேலூர் மாவட்டம் - வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் - நாட்டறாம்பள்ளி, வாணியம்பாடி, தர்மபுரி மாவட்டம் - தர்மபுரி, விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம், சேலம் மாவட்டம் - சேலம் நகரம், குகை, ஈரோடு மாவட்டம் - ஈரோடு, நீலகிரி மாவட்டம் - கூடலூர், கோயம்புத்தூர் மாவட்டம் - கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டம் - பழனி, கரூர் மாவட்டம் - குளித்தலை, திருச்சி மாவட்டம் - திருச்சி, கடலூர் மாவட்டம் - கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம் - நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் - திருபுவனம், மதுரை மாவட்டம் - மதுரை தெற்கு, தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் - திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் - அகஸ்தீஸ்வரம், கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடங்கப்படுகிறது.
இந்த பள்ளிகளில், அனைத்து வசதிகளும் கொண்ட நூலகம் மற்றும் அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றும் சிறந்த நூலகர்கள் வாயிலாக மாணவர்களின் வாசிப்பு பழக்கம் மேம்படுத்தப்படும். விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தொழில்முறை பயிற்சியாளர்கள் வாயிலாக அவர்களுடைய விளையாட்டு செயல்பாடுகளில் முன்னேற்றத்தை உண்டாக்கி அவர்களது மனநலமும், உடல்நலமும் பேணப்படும். கலைகள், நாடகங்கள் மற்றும் இசை ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் தன்னம்பிக்கையும் வெளிப்பாட்டு திறனும் வளர்க்கப்படும். இவற்றோடு மெய்நிகர் டிஜிட்டல் உலகத்தோடு போட்டியிடும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். இத்திட்டம் வருங்காலத்தில் படிப்படியாக அனைத்து மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தப்படும். அதேபோன்று, இந்த கல்வியாண்டிற்கு சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசு பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.