புதுடெல்லி: இந்தியா-சீனா இடையேயான கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்த விவரங்கள் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியா, சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சண்டையில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்த போதும் சீனா அதனை ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில், ஒன்றிய அரசின் நிலைப்பாடு நாட்டு மக்களை தவறுதலாக வழிநடத்துவதாக கூறி, கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்த விவரங்களை தெரியப்படுத்தும்படி கோரி அபிஜித் சராப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி யுயு லலித் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவம் கொள்கை விவகாரங்களுடன் தொடர்புடையது. இது அரசு விவகாரம். எல்லையில் சண்டைகள் நடப்பது வழக்கமானது. இதில் எல்லை பகுதியை இழக்கிறோமோ இல்லையோ, மற்ற தரப்பில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்டதா அல்லது இந்தியா அவர்களது எல்லையை ஆக்கிரமித்துள்ளதா என்பது நீதிமன்றத்தின் விவகாரம் அல்ல,’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு தள்ளுபடியானதை தனது டிவிட்டர் பதிவில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ வரவேற்றுள்ளார்.