சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.15,63,030 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18.08.2022 முதல் 02.09.2022 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.8,39,520/- அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.6,25,810/- அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 211 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ரூ.97,700/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத விவரம் : வ. எண் மண்டலங்கள், குப்பைகள் கொட்டிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதம் (ரூ.), கட்டுமானக் கழிவுகள் கொட்டிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதம் (ரூ.), சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதம் (ரூ.)
1. திருவொற்றியூர் 26,200 53,000 3,500
2. மணலி 14,500 10,500 4,000
3. மாதவரம் 47,500 20,000 7,000
4. தண்டையார்பேட்டை 42,000 39,810 7,000
5. இராயபுரம் 45,500 37,000 5,000
6. திரு.வி.க.நகர் 41,000 15,000 7,300
7. அம்பத்தூர் 54,000 54,000 6,900
8. அண்ணாநகர் 1,00,800 60,000 5,000
9. தேனாம்பேட்டை 89,520 49,000 5,000
10. கோடம்பாக்கம் 54,500 75,000 7,500
11. வளசரவாக்கம் 45,300 47,000 9,000
12. ஆலந்தூர் 40,700 46,000 5,000
13. அடையாறு 32,000 43,000 5,000
14. பெருங்குடி 91,500 32,000 10,500
15. சோழிங்கநல்லூர் 1,14,500 44,500 10,000
மொத்தம் 8,39,520 6,25,810 97,700
எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.