மாஸ்கோ: நுபுர் சர்மாவை கொல்ல சதித்திட்டம் தீட்டிய கும்பலை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் ரஷ்யாவில் கைதான நிலையில், அவன் துருக்கியில் இருந்து மாஸ்கோ சென்ற விபரங்கள் அம்பலமாகி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ெவளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளோம். அந்த நபர் ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர், இந்தியத் தலைவர் ஒருவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபர் ஆளுங்கட்சி வட்டாரத்துடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்வதற்காகவே இந்த நபரை துருக்கியைச் சேர்ந்த சிலர் பயிற்சி கொடுத்து தயார் செய்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய புலனாய்வு அமைப்புகள் ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸுக்கு (எப்எஸ்எஸ்) எழுதியுள்ள கடிதத்தில், ‘பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை பழிதீர்ப்பதற்காக ரஷ்யா அரசால் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற தற்கொலை படை தீவிரவாதி மஷ்ரப்கான் அசமோவ் குறித்த விரிவான விபரங்களை தெரிவிக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளது. இந்த செய்தியை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தீவிரவாதி மஷ்ரப்கான் அசாமோவ் துருக்கியில் பயிற்சி பெற்றவர் என்றும், அவர் இந்திய நாட்டின் விசாவைப் பெறுவதற்காக மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாதி மஷ்ரப்கான் அசாமோவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.