காபூல்: ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் மாணவர்கள் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஆப்கனின் தெற்கு மாகாணமான ஹெல்மண்ட் அருகே உள்ள நாட் அலி என்ற இடத்தில் இஸ்லாமிய மாணவர்களுக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு வெளியே மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தபோது அவர்களுக்கு வெடிக்காத குண்டு ஒன்று கிடைத்துள்ளது. அதனை வைத்து சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் 4 மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தாலிபான் படையினர், காயமடைந்த 8 மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி அருகே வெடிகுண்டு வந்தது எப்படி? என விசாரித்து வரும் தாலிபான் படையினர், அந்த பகுதியில் வேறு ஏதேனும் குண்டு உள்ளதா? என்று சோதனை செய்து வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.