×

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்யக்கூடாது: லஞ்சஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை அடுத்து வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையை புறக்கணிக்க அரசு முடிவெடுத்துள்ளது, விசாரணை நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை போன்றது எனத் தெரிவித்துள்ளார்.

புகார்தாரர்கள் தெரிவித்த 14 குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்ற ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை மீறி வழக்குப்பதிவு செய்ததற்கான காரணம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் வேலுமணி மீது பதிவான இரு வழக்குகளை எதிர்த்து தனி நீதிபதி முன்பாகத்தான் வழக்கு தொடர்ந்து வாதிட வேண்டுமென்றும், இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு உகந்தல்ல என வாதிடப்பட்டது.

வேலுமணி தரப்பில் புகாரில் முகாந்திரம் இல்லை என்கிற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை எனவும், தணிக்கை குழு அறிக்கையில் தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் கூறப்படாத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன்  பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி), தனக்கு எதிராக பதிவு செய்த இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை (எப்ஐஆர்) ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் நகராட்சி நிர்வாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல் செய்தார். இதற்கு விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அண்மையில் அளித்துள்ள பதில் மனுவில், ‘எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்த போது மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்துள்ளார். ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்த பணிகளை செய்வதற்காக பி செந்தில் அண்ட் கோ என்ற பெயரில் எஸ்பி.வேலுமணி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். பதவியை பயன்படுத்தி இவர் டெண்டர்களை முறைகேடாக வழங்கியுள்ளார். வேலுமணிக்கு நெருக்கமானவர்ளுக்கு டெண்டர் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இது முழுக்க முழுக்க விதிமீறலாகும். ஏராளமான அரசு பணத்தை அபகரிக்க இவர் மிகப்பெரிய சதி செய்துள்ளார். அதனால் வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது’ என்று தெரிவித்துள்ளது.


Tags : Former Minister ,GP , Former Minister S.P. Velumani, corruption cases No cancellation, anti-bribery
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...