×

எடப்பாடி அணியை சேர்ந்த முக்கிய பிரமுகரை இழுக்க திட்டம்?.. ஓபிஎஸ் ஆதரவாளரின் ரூ.50 லட்சம் பணத்துடன் டிரைவர் எஸ்கேப்: பெரியகுளத்தில் பரபரப்பு

பெரியகுளம்: ஓ.பி.எஸ்சின் ஆதரவாளரின் 50 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, அவரது டிரைவர் தப்பி ஓடியதாக, பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது கணவரை காணவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து என்றும் டிரைவரின் மனைவியும் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். எடப்பாடி அணியை சேர்ந்த முக்கிய பிரமுகரை, ஓபிஎஸ் பக்கம் இழுக்க ெகாண்டு செல்லப்பட்ட அட்வான்ஸ் தொகையாக இது இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வருகிறார். இவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர்.  மேலும் ஓபிஎஸ்சின் குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவர். தேனி மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ளார். பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் தர். இவர் நாராயணனிடம் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் உசிலம்பட்டியில் இருந்து நாராயணன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் காரில் பெரியகுளம் நோக்கி வந்துள்ளனர். காரை தர் ஓட்டி வந்துள்ளார். ஆண்டிபட்டி அருகே நாராயணனும், அவரது நண்பரும் காரில் இருந்து இறங்கியுள்ளனர். அப்போது காரில் உள்ள 50 லட்சம் பணத்தை, பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் கொடுத்து விடுமாறு டிரைவர் தரிடம், நாராயணன் ஒப்படைத்துள்ளார். பின்னர் அவர் ஆண்டிபட்டியில் இருந்து தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகானின் காரில், அவருடன் பேசிக் கொண்டே பெரியகுளம் வந்துள்ளார்.

இந்த நிலையில் காரை நாராயணன் வீட்டில் நிறுத்திய தர், காரில் இருந்த 50 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பி ஒடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் தரை கண்டுபிடிக்க முடியாததினால் பின்னர் நாராயணன் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பணம் எதற்காக காரில் எடுத்து செல்லப்பட்டது என்றும் நாராயணனிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தனது கணவரை கடந்த 3 நாட்களாக காணவில்லை என்றும், அவரது செல்போன் அணைத்து வைக்கபட்டிருக்கிறது என்றும், எனவே அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் டிரைவர் தரின் மனைவி கெங்கம்மாள் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வடகரை போலீசார் வழக்குப்பதிந்து தரை தேடி வருகின்றனர்.

எடப்பாடி அணியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை, ஓபிஎஸ் பக்கம் இழுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டது என்றும், இது அட்வான்ஸ் தொகை மட்டுமே என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்தும் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : edapadi ,Periyakulam , Edappadi Team, OPS Supporter, Driver Escape,
× RELATED ஈவு இரக்கம் இல்லமல் ஒரு ஆட்சி எப்படி...