×

மீஞ்சூர் அருகே கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து நகை கொள்ளை

பொன்னேரி: மீஞ்சூர் அருகே நேற்று நள்ளிரவு ஒரு எலக்ட்ரிகல் கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம், மகாவீர் நகர், மின்வாரிய குடியிருப்பில் வசிப்பவர் நித்யானந்தம். இவரது மகன் முருகேஷ் (30). இவர், வடசென்னை பகுதிகளில் எலக்ட்ரிகல் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க முருகேஷ் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். பின்னர் அனைவரும் இன்று காலை 7 மணியளவில் வீடு திரும்பினர். இந்நிலையில், தனது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து முருகேஷ் அதிர்ச்சியானார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்து துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் மறைத்து வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கு மர்ம நபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை நிபுணர்கள் சேகரித்தனர். இப்புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Tags : Meenjoor , Contractor's house, jewelery robbery
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...