சென்னை: பதிவுத்துறை வலைதளத்தை இலவசமாக பார்வையிட ஏற்படுத்தியிருந்த வசதியை பயன்படுத்தி வில்லங்க சான்றுகளை தரவிறக்கம் செய்வது கண்டறியப்பட்டு, இதுபோன்ற கைபேசி செயலிகளின் இணைப்பு தற்போது துண்டிக்கப்பட்டு, நெட்வொர்க் பிரச்னை சீராக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
* ஆவணதாரர்களை ஆதார் வழி அடையாளம் கண்டு ஆள்மாறாட்டத்தை முற்றிலும் தவிர்த்தல்.
* வில்லங்கச்சான்றில் திருத்தம் மேற்கொள்ள இணையவழி விண்ணப்பித்தல்.
* கிறித்தவ திருமண வடிப்புகளை சம்பந்தப்பட்ட துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையவழி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுதல்.
* ஒருங்கிணைந்த தணிக்கை அலகு.
* முதியவர்களுக்கு ஆவணப்பதிவில் முன்னுரிமை.
* ஆவணங்களை பதிவு செய்வதற்காக பொதுமக்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு சார்பதிவாளர் அலுவலகம் வந்த பின்னர் முன்பதிவு செய்த அதே வரிசையில் வரிசைக்கிரமமாக எந்தவிதமான பாகுபாடுமின்றி ஆவணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பொதுமக்கள் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே பதிவுக்கு ஆவணங்களை தாக்கல் செய்கின்றனர். மங்களகரமான நாட்களில் ஆவணப்பதிவு மேற்கொள்ள விரும்பி ஒரே சமயத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு ஒரே சமயத்தில் அனைத்து அலுவலகங்களிலும் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும்போது நெட்வொர்க்கில் அதிக நெரிசல் ஏற்பட்டு மென்பொருளின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.
பொதுமக்களின் வசதிக்காக சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பதிவுத்துறையின் வலைதளத்தில் இருந்து இணையவழியாக இலவசமாக பார்வையிட ஏற்படுத்தியிருந்த வசதியினை பயன்படுத்தி சில கைபேசி செயலிகள் வில்லங்க சான்றுகளை தரவிறக்கம் செய்து வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
இதனால் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்னையை நிவர்த்தி செய்து மென்பொருளை மேம்படுத்தும் பணிகள் இரவு பகலாக நடைபெற்றது. தன்னிச்சையாக பதிவுத்துறை வலைதளத்தில் டேக் செய்யப்பட்டிருந்த அந்த கைபேசி செயலிகளின் இணைப்பு தற்போது துண்டிக்கப்பட்டு, நெட்வொர்க் பிரச்னை சீராக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறையின் யு.ஆர்.எல். எனப்படும் இணைய முகவரியினை குறியாக்கம் செய்தல், இரண்டு நொடிகளுக்கு மேல் காலமெடுக்கும் மித வேக தரவு தள வினவுகளை மாற்றியமைத்தல், தரவு தளத்தை சுத்தப்படுத்துதல் ஆகிய மேம்பாட்டு பணிகள் மூலம் மென்பொருள் சீர் செய்யப்பட்டு 2-9-2022 முதல் பொதுமக்கள் எந்தவிதமான இன்னலுமின்றி ஆவணப்பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மென்பொருள் துரிதமாக செயல்படுவது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு ஆவணப்பதிவு தங்கு தடையின்றி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.