×

நடிகை புகார் வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரம் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரையில் பதுங்கல்: நண்பர்கள், மருத்துவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு

மதுரை: நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில், அதிமுக  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ளார். இவர் மதுரையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மதுரையில்  முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.அதிமுக அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் மணிகண்டன். இவருக்கு எதிராக கடந்த மாதம் திரைப்பட நடிகை சாந்தினி, சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், ‘‘முன்னாள் அமைச்சர் மணிகண்டன், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதனால் 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்தோம். அப்போது 3 முறை கருவுற்றேன். என்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்க செய்தார். தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார்’’ என்று கூறியிருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவான மணிகண்டன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.   இதையடுத்து மாஜி அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி, தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் ராமநாதபுரம் மற்றும் மதுரைக்கு விரைந்தனர். ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், 2 எஸ்ஐக்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தனிப்படை  போலீசார் நேற்று காலை மதுரை வந்தனர். மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் இதே பகுதியில் உள்ள இவரது நெருங்கிய நண்பர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றியதால், இவருடன் பணியாற்றிய மற்றும் நெருக்கமான டாக்டர்கள், செவிலியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள சில சீனியர் டாக்டரிகளிடமும் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இந்த பட்டியலில், மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமல்லாமல், நண்பர்களின் பெயர்களும் குறிப்பாக, ஒரு பிரபல மருந்துக்கடை அதிபரின் பெயரையும் போலீசார் சேகரித்துள்ளனர். இவர்களின் வீடுகள், நிறுவனங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கி உள்ளனர். மேலும் மணிகண்டன் பயன்படுத்தி வந்த செல்போன்களில் ஒரு செல்போனின் சிக்னல் மதுரை சுற்றுப்புற பகுதிகளில் இருப்பதாக பதிவாகி உள்ளது.  இதனையடுத்து தனிப்படை போலீசார், மதுரையிலேயே தங்கி தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் மணிகண்டன் பிடிபடுவார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது…

The post நடிகை புகார் வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரம் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரையில் பதுங்கல்: நண்பர்கள், மருத்துவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Manigantan ,Madurai ,Manikandan ,Former Minister ,Manikandon ,Dinakaran ,
× RELATED வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது