மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலில் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, கடந்த 31ம் தேதி பொதுமக்கள், இந்து முன்னணியினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்தனர். இதில், மாமல்லபுரத்தில் வைக்கப்பட்ட 3 சிலைகள், 2 நாட்கள் வழிபாடு நடத்தி நேற்று மாலை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இந்த விநாயகர் சிலை ஊர்வலம் மாமல்லபுரம் முக்கிய வீதிகளில் சுற்றி வந்தது.
பின்னர், கடற்கரைக்கு அருகே ஊர்வலம் முடிவடைந்தது. அங்கு, சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கடலுக்கு எடுத்து சென்று கரைக்கப்பட்டது. முன்னதாக, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதிஸ்வரன் மேற்பார்வையில், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுதவிர, இந்து முன்னணி சார்பில் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளும் நாளை 4ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று மாமல்லபுரம் கடலில் கரைக்கப்படுகிறது.