பொன்னேரி: அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் பேரிடர் காலங்களில் மக்களை எப்படி மீட்பது மற்றும் வெள்ள தடுப்பு காலங்களில் மேற்கொள்ள வேண்டியவை குறித்து செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் பேரிடர் காலங்களில் மக்களை எப்படி மீட்டு காப்பாற்றுவது என்பது குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைக்குழு மூலமாக, வெள்ளத்தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எம்டிஜி.கதிர்வேல் முன்னிலை வகித்தார்.
இதில் திருவள்ளூர் கொள்ளை நோய் பாதுகாப்பு அலுவலர் கார்த்திகேயன், பொன்னேரி தனி தாசில்தார் சுமதி, மீஞ்சூர் ஒன்றிய தலைவர் ரவி, அதிகாரிகள் ரவி, ராமகிருஷ்ணன், வேதநாயகம், மீஞ்சூர் வட்டார தலைமை மருத்துவர் ராஜேஷ், சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அப்துல்லா, அதிகாரி மோகன்தாஸ், வருவாய் ஆய்வாளர் அருணாசலம், கிராம நிர்வாக அலுவலர் தவசி ஆகியோர் பங்கேற்று, பேரிடர் மீட்பு மற்றும் வெள்ள தடுப்பு பணிகளில் எவ்விதம் செயல்படுவது என செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் ஊராட்சி செயலர் பொற்கொடி, வார்டு உறுப்பினர்கள் கோமதிநாயகம், பரிமளம், விஜயா, அருண் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.