புதுடெல்லி: ஜெர்மனியை சேர்ந்த பிரபல விமான போக்குவரத்து நிறுவனமான, லுப்தான்சாவின் விமானிகள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்த நிறுவனத்தை சேர்ந்த 800 விமானங்கள் இயக்கப்படாமல் முடங்கி உள்ளன. பயணிகள், சரக்கு விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் இந்த நிறுவனம் அறிவித்தது. இதனால், ஜெர்மனி உட்பட உலகம் முழுவதும் இந்நிறுவன விமானங்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், லுப்தான்சா விமானத்தில் செல்வதற்காக 700 பயணிகள் டெல்லி விமான நிலையத்துக்கு நேற்று வந்தனர். ஆனால், லுப்தான்சா தனது 2 விமானங்களையும் ரத்து செய்து இருந்தது. இதனால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.