×

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!: லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு போக்சோ சட்டத்தில் கைது..கர்நாடக போலீஸ் அதிரடி..!!

சித்ரதுர்கா: கர்நாடகத்தில் 2 சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்த வழக்கில் முருகா மடத்தின் தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். லிங்காயத் மடங்களை சேர்ந்த சாமியார்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நேற்று இரவு 10 மணியளவில் அவரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருகா மடத்தின் தலைமை மடாதிபதியான சிவமூர்த்தி முருகா சரணகுரு மீது அந்த மடத்தில் தங்கியிருந்த 2 சிறுமிகள் போலீசில் புகார் அளித்தனர்.

தங்களை 2 ஆண்டுகளாக சாமியார் சிவமூர்த்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை சிறுமிகள் முன்வைத்தனர். சாமியார் சிவமூர்த்தி முருகாவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் லிங்காயத் மடங்களை சேர்ந்த சாமியார்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஆனால் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகள் எழுப்பிய தொடர் கேள்விகளை தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பு சாமியாரை சித்ரதுர்கா போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். செவ்வாய்கிழமையன்று சாமியாரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று இரவு 10 மணியளவில் லிங்காயத் சாமியார் சிவமூர்த்தி முருகா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சாமியார் சிவமூர்த்தி முருகாவுக்கு முறைப்படி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமை சாமியாரின் கைதால் பதற்றமான சூழல் நிலவுவதால் சித்ரதுர்கா மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : Linghayat ,Shivamurthi Muruga Saranakuru ,Police Action , Girl, sex, Lingayat abbot Sivamurthy, arrested
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...