தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அளித்த பேட்டி: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்து 76வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் விடுதலைக்காக போராடிய வீரர்களின் தியாகங்களை தொடர்ந்து ஒன்றிய அரசு போற்றி வருகிறது. அவர்களை நினைவு கூரும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. நாட்டில் 75 சுதந்திர போராட்ட வீரர்களுடைய வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்புகிறோம்.
இதில் தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வேலுநாச்சியார் போன்றவருடைய வாழ்க்கை வரலாறும் இடம் பெறுகிறது. இது அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. நாடு 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வரும் நிலையில், நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.