திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென்மண்டல கவுன்சிலின் 30வது கூட்டம் திருவனந்தபுரத்தில் வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திரா மாநில முதல்வர்களும், அந்தமான் நிக்கோபர் மற்றும் லட்சத்தீவுகள் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் வருகிறார். இன்று அவர், கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து இரு மாநில உறவுகள் குறித்து பேச உள்ளார். குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை பிரச்னைகள் குறித்து பேச இருப்பதாக தெரிகிறது. பேபி அணை முன் உள்ள 15 மரங்களை வெட்ட வேண்டும் என்று தமிழகம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. முதலில் கேரளா இதற்கு சம்மதித்த போதிலும், பின்னர் முடிவை வாபஸ் பெற்று விட்டது. இதையடுத்து, இந்த மரங்களை வெட்ட கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இது பற்றியும் இன்றைய சந்திப்பில் பேசப்படும் என தெரிகிறது.