×

நைஜீரிய பெண்- வாலிபர் காதல் திருமணம்: வாலாஜாவில் இன்று நடந்தது

வாலாஜா: வாலாஜாவை சேர்ந்த வாலிபர்-நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண் காதல் திருமணம் இன்று வாலாஜாவில் நடந்தது. புதுமணமக்களை பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஜம்பயன் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி-லட்சுமி தம்பதியர். ‌இவர்களது மகன் திருமால்பிரசாத் (28). இவர் மெக்கட்ரானிக்ஸ் டிப்ளோமா பட்டம் பெற்றவர். தற்போது ஜெர்மன் நாட்டில் வேலை செய்து வருகிறார்.

முன்னதாக நைஜீரியா நாட்டில் ஒருசில ஆண்டுகள் வேலை செய்து வந்தார். அங்குள்ள லாகோஸ் நகரைச் சேர்ந்த பட்ரிசியாஇஃயின்எஜெ (25) என்ற பெண் சுற்றுலா துறையில் பட்டப்படிப்பு படித்து அங்கேயே வேலை செய்து வருகிறார். அப்போது இவர்களிடையே காதல் ஏற்பட்டது. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இதையடுத்து இருவரும் தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி அவர்களது பெற்றோர் ஒப்புதலும் கிடைத்தது. பட்ரிசியாவுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். இதை தனது காதலனிடம் தெரிவித்தார். அதன்படி இவர்களது திருமண ஏற்பாடு மணமகனின் சொந்த ஊரான‌ வாலாஜாவில் செய்யப்பட்டது. இதற்காக மணமகள் பட்ரிசியா நைஜீரியா நாட்டில் இருந்து தனது அண்ணன் சிபுஸேர்வாலண்னைடன்எஜெ என்பவருடன் நேற்று முன்தினம் வாலாஜா வந்தார்.

வாலாஜா அடுத்த அல்லிகுளத்தில் உள்ள‌ ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்றிரவு மணமக்கள் வரவேற்பு மேளதாளத்துடன் நடந்தது. இதையடுத்து இன்று காலை திருமண விழா சிறப்பாக நடந்தது. அதில் மணமகள் தமிழ் முறைப்படி திருமண பட்டாடை அணிந்திருந்தார். இதையடுத்து புரோகிதர் மந்திரம் ஓத மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அவர்களை உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வாழ்த்தினர்.

Tags : Walliper ,Wallaja , Nigerian girl-boy love marriage: took place today in Walajah
× RELATED முத்துக்கடை- வாலாஜா சாலையில் நடக்கும்...