×

கள்ளக்குறிச்சி அருகே இன்று காலை திருமண விழாவிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமண விழாவுக்கு சென்றபோது வேன் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கோவிந்தன் (49). இவரது மகளுக்கு கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கோவிந்தனின் உறவினர்கள் 29 பேர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான வேனில் வாடகை அடிப்படையில் பயணம் செய்தனர். ராயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (39) மற்றும் 15 ஆண்கள், 10 பெண்கள், 4 சிறுவர்கள் என மொத்தம் 30 பேர் வேனில் இருந்தனர். இன்று காலை 7.30 மணி அளவில் ஆலத்தூர் கிராமம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டாரஸ் லாரி வேனை முந்திச்செல்ல முயன்றபோது எதிரே மற்றொரு வாகனம் வந்ததால் அதன்மீது மோதாமல் இருக்க லாரி டிரைவர் லாரியை இடதுபுறம் திருப்பினார்.

இதனால் வேன் டிரைவரும் லாரி மீது மோதாமல் இருக்க இடதுபுறம் திருப்பியபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இடிபாட்டுக்குள் சிக்கி வேன் டிரைவர் உள்பட 30 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே விபத்துக்கு காரணமான டாரஸ் லாரி டிரைவர் விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர். திருமண விழாவுக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து டிரைவர் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : kallakkurichi , A wedding ceremony van overturned near Kallakurichi this morning
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...